Sunday, April 6, 2014

நல்படிப்பினை நல்கும் பங்குனித் திருநாள்


நல்படிப்பினை நல்கும் பங்குனித் திருநாள்
(ஸ்ரீரங்கம் முரளீ பட்டர்)
”இன்றைக்கு நாம் எழுந்தருளின இடத்திலே திருக்காப்பு சேர்த்துக்கொண்டு, திருமுக மண்டலத்தைத் திருப்பிக்கொண்டு, திருச்சேவடிமார்கள் கைகளாலே பந்துக்களாலும், பழங்களாலும் விட்டெறிவித்து, இப்படி ஒருநாளும் பண்ணாத அவமானங்களையெல்லம் இப்படி பண்ணவந்த கார்யம் எது…..?”
எல்லாரையும் “அஞ்சேல்” என்று தம் காக்கும் கரம் காட்டி அபயமளித்து, அபேக்ஷிக்கும் அரங்கனே புலம்பி தவிக்கின்றானே..? சக்ரவர்த்திக்கெல்லாம் சக்ரவர்த்தியான சக்ரவர்த்தி திருமகனால் ஆராதிக்கப்பட்டவரும், எல்லா திவ்யதேச எம்பெருமான்களுக்கும் இராஜாவானவரும், ஆழ்வார்கள் அனைவராலும் அபிமானிக்கப் பெற்றவரான ரங்கராஜாவன்றோ இவ்வாறு சோகித்து புலம்புகின்றார். அதுவும் கருணா நாயகியான ரங்கநாயகி ஸந்நிதி வாசலின் முன் நின்று இப்படி அவமானப்படுகின்றாரே…! தாயாரின் இந்த கோபத்திற்கு காரணம்…?
நம்பெருமாள் ஸ்ரீரங்கம் வந்தடைய, தர்மவர்மா எனும் ஒரு சோழ மாமன்னின் கடும் தவமும் ஒரு காரணமாயிருந்தது. இந்த மன்னனின் குலக்கொழுந்து கமலவல்லி நாச்சியார். பங்குனி மாதம் ஆயில்ய நட்சத்திரத்தில் அவதரித்தவள். இவள் அரங்கனிடத்து அன்பு மிக கொண்டு கலந்தவள். இந்த தாயாரை பிறந்த நாளன்று அனுக்ரஹம் செய்வதற்கு அவள் பிறந்த உறையூருக்கேச் சென்று, தாயாருடன் சேர்த்தி கண்டருளியதை, ஸ்ரீரங்கநாச்சியாரின் அந்தரங்க தாதியர் ஒருவர் தாயாரிடம் போட்டு கொடுக்க “பிரணய கலகம்“ என்னும் “தெய்வீக ஊடல்“ அமர்க்களப்பட்டு கொண்டிருக்கின்றது. அரஙகன் அவமானத்திற்கு மேல் அவமானப்பட்டு கொண்டிருக்கின்றான்.

உறையூருக்குப் பெருமாள் எழுந்தருள இன்னொரு மிக முக்கியமான காரணமும் உண்டு. அது, அனுதினமும் தன்னை காவிரிக்கரையில் துதித்து, அழுது, தொழுது, உருகிய திருப்பாணாழ்வார் ( உறையூர் – திருப்பாணாழ்வாரின் அவதாரத் தலம்.) அவதரித்த கழனிதன்னில், தம் திருப்பாதங்களையிட்டு தாம் ஆனந்தபடுவதற்காகவும், திருப்பாணாழ்வாருக்கு ஒரு ஏற்றம் தருவதற்காகவும், அன்பு மேலிட்டு எழுந்தருளப்போக, அவதியாய் அமைந்துவிட்டது..! பாவம்…!
இந்த உற்சவம் முழுவதுமே, அரங்கன் தம் பக்தர்கள் அனைவரையும் ஆட்கொள்ளவும், அன்பு கொள்ளவும், அங்குமிங்கும் அலைந்துஈ ஆட்பார்த்துயுழி தரும் அற்புதமான உற்சவம். நம்பெருமாளுக்கு, ஜீயர்புரம், எல்லைக்கரை மண்டபம், இரட்டை மண்டபம் என எப்போதும் அலைச்சல்தான்..!
ஆனால்…! பெரியபிராட்டிக்கு சந்தேகம்..! அரங்கனுக்கு திண்டாட்டம்..!
இவர்களின் ஊடலைத் தீர்த்து வைக்க, இந்த இரண்டு பேர்களாலும் மதிக்கப்பெறும் ஒருவர் வேண்டுமே..? யார் அவர்..? நம்மாழ்வாரைத் தவிர வேறு யாரால் இந்த சிக்கலைத் தீர்க்கமுடியும்?
நம்மாழ்வார் எழுந்தருளி சமாதானம் செய்து வைக்க ஊடல் முடிந்து கூடல் எனப்பெறும் “தெய்வீக சேர்த்தி“யானது, இந்த மண்ணுலகு உய்ய, மண்ணுலகிலுள்ள மனிசர்கள் உய்ய ஆரம்பமாகின்றது..!

ஸ்ரீபாஞ்சராத்ர ஆகம்மானது பிரணயகலகம் எனப்படும் உற்சவத்தினைக் கொண்டாடுமாறு சொல்கின்றது. நம்பெருமாள், பங்குனி ஆறாம் திருநாளன்று உறையூர் எழுந்தருளியது ஒரு நல்ல காரணமாக அமைய, உற்சவம் அழகுபட பிரணயகலகத்துடன் அமைக்கப்பெற்றது.

இந்த பிரணயகலகமானது, ஜீவாத்மா – பரமாத்மா இடையில் நடக்கும் போராட்டத்தின் ஒரு சூக்கும்மான வெளிப்பாடு. தாயார் ஜீவாத்மாவிற்காக அதீத கருணைக்காட்டும் அற்புதமான அன்பு கொண்டவள். குற்றமே செய்தொழியும் சேதனர்களின் குற்றம் ஒதுக்கி, சிறு நல்குணம் இருந்தாலும், அதனை பெரிதுபடுத்தி, மிக்கத் தாயன்போடு, எம்பெருமானிடத்தில் தாம் உஜ்ஜீவிக்க சிபார்சு செய்பவள். பகைவனுக்கும் அருளும் பண்புள்ளவள்.
இராவணன் சீதையினை அடைய விரும்பினான். அந்த கணமே சீதாப்பிராட்டி தம் கற்பெனும் தீயினால் இராவணனைக் கொன்றிருக்க முடியும்…! ஆயினும் இராவணனிடத்தில் “மனோ நிவிர்த்தய” என்று சூசகமாக அறிவுறுத்துகின்றாள். மனநிலையை திருப்பச் சொல்கின்றாள். அதாவது “மன“ என்னும் வார்த்தையினை திருப்பிப்படித்தால் “நம“ (வணங்கு) எனும் பொருள் வரும். பிராட்டியாரின் அறிவுரையினை ஏற்காத இராவணன் வீழ்ந்தான். சரணடைந்த வீபிடணன் பேறு பெற்றான்.
ஸ்ரீபராசரபட்டர், பெரியபிராட்டியினை தரிசிக்கின்றார். தாயார் வெட்கப்படுவதை போன்று அவர் மனதில் படுகின்றது. பிராட்டியார் தனிக்கோவிலிலன்றோ வீற்றிருக்கின்றாள்..! வெட்கப்பட வேண்டியதில்லையே..! சிந்திக்கின்றார்..! சொல்கின்றார்..”தன்னிடம் சரணாகதியடைந்தவர்களுக்கு, தாம் கொடுக்கு ஐஸ்வர்யம் போதாது. மேலும் கொடுக்க வழியில்லையே..” என்று எண்ணியெண்ணி நாணுகின்றாளோ…!”. ரசனைபட வர்ணிக்கின்றார்.
பிராட்டியாரோடு சேர்ந்த பரந்தாமன்தான் பரம்பொருள். எப்போதுமே தம் திருமார்பினை விட்டு அகலாத தாயாருடனே இருந்தால் கூட, இந்த ஒரு நாள் மட்டும் நிதர்சனமாக அருகருகே நெருக்கமாய் அமர்ந்து, ஆண்டிற்கொருமுறை, அருள்பாலிப்பது அற்புதமான ஒரு நிகழ்வு. இந்த நாள் ஒரு இனிய நாள்..! பரிவு பொங்கும் பெருநாள்..! கற்பகத்தரு போன்று வேண்டியது நல்கும் நன்னாள்..!
இதனை நன்கறிநதவர் உடையவர். இந்நாளில்தான் அவர்தாம் இயற்றிய, ஸ்ரீரங்க்கத்யம், வைகுண்டகத்யம், சரணாகதி கத்யம் ஆகிய ஒப்பற்ற மூன்று இரத்தின பாமாலைகளை திவ்யதம்பதிகளின் திருவடிகளில் சமர்ப்பித்து, திருப்பாதங்கள் சரணடைந்து, தமக்கு பரமபதம் பிரார்த்தித்து, கிடைக்கப்பெற்றார்.
இந்த உற்சவமானது, பெரிய பெருமாளின் அவதார நட்சத்திரமான ரோஹிணியில் தொடங்குகின்றது. கமலவல்லித் தாயாரின் அவதார நட்சத்திரமான பங்குனி ஆயில்யம் (6ம் திருநாள்) அவருடன் சேர்த்தி கண்டருளி அனுக்ரஹித்தும், பெரியபிராட்டியார் அவதரித்த உத்திரம் நட்சத்திரத்தன்று (9ம் திருநாள்) பெரியபிராட்டியாரோடு சேர்த்தி கண்டருளியும், தம்மை தரிசிப்பவர்களுக்கெல்லாம், அதீத வாஞ்சையுடனும், அன்பு மிகுந்து அருள்பாலிக்கும், வேண்டிய வரமெல்லாம் நல்கும், ஒரு கருணைமிக்க உற்சவம்.
இந்த திருநாளின்போது, திவ்யதம்பதிகள் சூக்கும்மாக நமக்கு சில விஷயங்களைத் தெளிவுப்படுத்துகின்றனர். இது இன்றளவும் நமக்கு ஏற்புடைதயதாகயுள்ளது. இதனை நாமறிந்து வாழ்வோமானால் என்றும் நன்மையுண்டு. அவையாவன.
என்னதான் கருத்து வேறுபாடுகள் கணவன், மனைவிக்குள் ஏற்பட்டாலும், யாரேனும் ஒருவருக்கு ஒருவர் விட்டுக்கொடுத்து, பொறுமையுடன் மீண்டும் இணைதல் வேண்டும். பிரிவு ஒன்றே தீர்வு எனக் கருதவேண்டாம். முடிந்தவரை பொறுமை காட்ட வேண்டும்.
சான்றோர்கள் அறிவுரையை ஏற்க வேண்டும். இதனை நம்மாழ்வாரின் அறிவுரையினைத் தாயார் ஏற்று, நம்பெருமாளுடன் சேர்த்தி கண்டருளுவதின் மூலம் நமக்கெல்லாம் உணர்த்துகின்றார்.
அனைவரிடத்திலும் அன்பாகயிருக்கவேண்டும். எப்போதும் குற்றமேக் காணக்கூடாது. கோபித்தல் கூடாது.
திருமகளும் மண்மகளும் சிறக்கவந்தோன் வாழியே..!
பங்குனியில் உத்திரநாள் பாருதித்தாள் வாழியே..!

1 comments:

  1. இந்த திருநாளின்போது, திவ்யதம்பதிகள் சூக்கும்மாக நமக்கு சில விஷயங்களைத் தெளிவுப்படுத்துகின்றனர். இது இன்றளவும் நமக்கு ஏற்புடைதயதாகயுள்ளது. இதனை நாமறிந்து வாழ்வோமானால் என்றும் நன்மையுண்டு. அவையாவன.
    என்னதான் கருத்து வேறுபாடுகள் கணவன், மனைவிக்குள் ஏற்பட்டாலும், யாரேனும் ஒருவருக்கு ஒருவர் விட்டுக்கொடுத்து, பொறுமையுடன் மீண்டும் இணைதல் வேண்டும். பிரிவு ஒன்றே தீர்வு எனக் கருதவேண்டாம். முடிந்தவரை பொறுமை காட்ட வேண்டும்.
    சான்றோர்கள் அறிவுரையை ஏற்க வேண்டும். இதனை நம்மாழ்வாரின் அறிவுரையினைத் தாயார் ஏற்று, நம்பெருமாளுடன் சேர்த்தி கண்டருளுவதின் மூலம் நமக்கெல்லாம் உணர்த்துகின்றார்.
    அனைவரிடத்திலும் அன்பாகயிருக்கவேண்டும். எப்போதும் குற்றமேக் காணக்கூடாது. கோபித்தல் கூடாது.
    திருமகளும் மண்மகளும் சிறக்கவந்தோன் வாழியே..!
    பங்குனியில் உத்திரநாள் பாருதித்தாள் வாழியே..!

    ReplyDelete